104. பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா?
------------------------------------------------------------
படம் : கேளடி கண்மணி
இசை : இளையராஜா
வரிகள் : பாவலர் வரதராசன்
குரல் : S.P.பாலசுப்ரமணியம்
------------------------------------------------------------
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ?
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா?
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா!
(மண்ணில்)
வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும்? பெண்மயில் சுகமன்றி
சந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்,
சிந்திவரும் குங்குமமுதம் தந்திடும் குமுதமும்,
கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்!
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்!
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம்தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்
(மண்ணில்)
முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோர் பிறவி?
இத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி!
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம் தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா?
(மண்ணில்)